நடிகை ரேவதி தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் பிரபல சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிற சீரியல் 'அழகு'. இதில் ரேவதியின் மகளாக நடித்து வந்தவர் சஹானா. சீரியல் 200 எபிசோடுகளைக் கடந்த நிலையில், ‘என்னுடைய கேரக்டருக்கு சீரியல்ல முக்கியத்துவம் இல்லை; அட்மாஸ்ஃபியராவே வந்து நின்னுட்டுப் போற மாதிரி இருக்கு’ என்று புகார் கூறிவிட்டுத் திடீரென தொடரிலிருந்து வெளியேறினார் சஹானா.
அப்போதே அவரிடம் நான் பேசியிருந்தேன்.

"பிரைம் டைம் சீரியல். அதுவும் ரேவதி மேடம் மகளா நடிக்கிறீங்க. நாலு அண்ணன் தம்பிங்களுக்கு ஒரே தங்கச்சியா வருவீங்க. கிட்டத்தட்ட `சின்னத்தம்பி’ குஷ்பு மாதிரி’னு சொல்லித்தான் தொடர்ல கமிட் பண்ணாங்க. யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு சான்ஸ்னு சந்தோஷமா நடிக்கப் போனேன். நல்லா போயிட்டிருந்தப்பவே திடீர்னு என்ன நடந்ததுன்னு தெரியலை, என் கேரக்டரின் முக்கியத்துவம் குறைஞ்சது. ரெண்டு பேர் பேசிட்டிருந்தா `செட் ப்ராப்பர்டி’ மாதிரி பக்கத்துல நின்னுட்டுப் போற மாதிரி சூழல் உருவாச்சு. இது எனக்கு ரொம்பவே வருத்தம் தந்துச்சு. என்னுடைய வருத்தத்தை டைரக்டர்கிட்டச் சொன்னேன். ஆனாலும் எந்த மாற்றமும் தெரியாததால தொடர்ல இருந்து வெளியேறிட்டேன்'’ எனச் சொல்லியிருந்தார்.
ஆனால், அடுத்த சில தினங்களில் சீரியல் யூனிட் இவரிடம் பேச, பழையபடி தொடருக்குள் வந்தார். சில மாதங்கள் ஷூட்டிங் போய் வந்துகொண்டிருந்த நிலையில்தான் கொரோனா வந்துவிட, ஷூட்டிங்கும் தடைபட்டது.
இந்த நிலையில் தற்போது '' `அழகு’ யூனிட் பண்ற வேலையால சீரியல்ல நடிக்கறதையே விட்டுடலாமான்னு தோணுது. அவங்களால் என் வாழ்க்கையே வீணாப்போயிடுமோனு பயமா இருக்கு’' என்கிறார்.
''மறுபடியும் என்ன பிரச்னை?’' என சஹானாவிடம் பேசினேன்.

’’சீன்ல சும்மா வந்து நின்னுட்டுப் போக முடியாதுனு சொல்லி வெளியேறினதும், யூனிட்ல இருந்து பேசி கேரக்டர் டெவலப் ஆகும்னு சொன்னாங்க. நம்பி மறுபடியும் போனேன். ஆனா பழையபடியும் அதே ஏமாற்றம்தான். கேட்டா, ’வெயிட் பண்ணுங்க’னு சொல்லிட்டே இருக்காங்க. எவ்ளோ நாளுக்கு வெயிட் பண்ண முடியும்? சீரியலே முடிஞ்சிடும் போல. அதனால `என்னை விட்டுடுங்க; நான் விலகிடுறேன்’னு முறையாச் சொல்லிட்டு ஷூட்டிங்கே போகலை. ஆனா, இந்தத் தேதி வரைக்கும் சீரியல்ல நான் இருக்கறதாவே யூனிட் தரப்புல சொல்லிட்டிருக்காங்க.
இது எனக்கு எந்த இடத்துல மைனஸா இருக்குன்னா, நான் வேற ஒரு சீரியலுக்கு ஆடிஷன் போனா, அங்கயும் பேசி, `அவங்க எங்க சீரியல்ல நடிச்சிட்டிருக்காங்களே’னு சொல்றாங்க. இவங்க இப்படி பண்றதாலேயே நான் ரெண்டு மூணு நல்ல வாய்ப்புகளை இழந்துட்டேன். இப்ப எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. `அவங்க எப்படிச் சொல்ல முடியும்; அவங்க சீரியல்ல இருக்காங்களா இல்லையான்னு நாங்கதான் சொல்லணும்’னு சொல்லிட்டிருக்காங்க.
ஒண்ணு சீரியல்ல ஓரளவுக்காவது முக்கியத்துவம் தரணும். இல்லாட்டி வெளியேத்திட்டு அந்தக் கேரக்டரை க்ளோஸ் பண்ணிடலாம். இதுவும் இல்லாம அதுவும் இல்லாம ஆர்ட்டிஸ்டுகளோட வாழ்க்கையில விளையாடிட்டிருந்தா என்ன சொல்றது? சீரியல்னால என் வாழ்க்கையே வீணாப் போயிடும்போல!
இப்ப இந்தக் கொரோனாவுக்குப் பிறகு சீரியல் பத்தி என்னென்னவோ பேசறாங்க. ரேவதி மேடமே சீரியல்ல இருக்காங்களா இல்லையான்னு தெரியாத ஒரு சூழல் நிலவிட்டிருக்கு. அப்படியிருக்கிறப்ப, வெளியே போறேன்கிற என்னை விட்டுட வேண்டியதுதானே?
தெலுங்குல சில பட வாய்ப்புகள் வந்து ஐதராபாத் போய் நடிச்சுட்டு வந்தேன். தொடர்ந்து அங்க வாய்ப்பு கிடைச்சா, சென்னையைக் காலி செஞ்சிட்டு ஆந்திரா பக்கமே போயிடலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்'' என்கிறார் சஹானா செம கோபத்துடன்.