
ஆரவ் திருமணம் தொடர்பாக அவரது நட்பு வட்டத்திலுள்ள சிலரிடம் பேசினேன்.
‘பிக்பாஸ்’ ஆரவ் இப்போ செம ஹேப்பி பாஸ்!
இருக்காதா பின்னே, கல்யாண மாப்பிள்ளை ஆகப்போகிறாரே... யெஸ்! கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ரிசார்ட் ஒன்றில் செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ‘பிக் பாஸ்’ ஆரவ் - நடிகை ராஹே ரெண்டுபேருக்கும் ‘திருமணம் என்னும் நிக்காஹ்.’
தேதி குறித்து, அழைப்பிதழ் அடித்து மிக மிக நெருங்கிய சிலருக்கு நேரில் சென்று தரத்தொடங்கிவிட்ட பிறகும்கூட ஏனோ ஆரவ் தனது திருமணம் குறித்து இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை. ஆனாலும் என்ன, இதெல்லாம் கண்டுபிடிச்சு உலகத்துக்கு சேதி சொல்றதுதானே நம்ம வேலை!

ஆரவ்வைக் கரம்பிடிக்கிற ராஹே, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜோஷ்வா’ மூலம் தமிழ்த்திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகவிருக்கிறார். ஆரவ் திருமணம் தொடர்பாக அவரது நட்பு வட்டத்திலுள்ள சிலரிடம் பேசினேன்.
“ராஹே குடும்பமும் ஆரவ் குடும்பமும் ஏற்கெனவே பரிச்சயமானவங்கதான். அந்தத் தொடர்புல ஆரவ்-ராஹே இடையே நட்பு உண்டாச்சு. அதேநேரம் ரெண்டு பேரு வீட்டுலயுமே பெரியவங்க ‘இவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாமே’ன்னு விரும்பியிருக்காங்க. ரெண்டு பேர்கிட்டயும் அதைச் சொல்லிச் சம்மதம் கேட்டதும், இவங்களும் ஒத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம்தான் கல்யாண தேதி முடிவாச்சு. அதனால இந்தக் கல்யாணத்தை லவ் கம் அரேஞ்ச்டு மேரேஜ்னே சொல்லலாம்’’ என்கிறார்கள்.

இந்தத் திருமணத்தில் இருதரப்பிலிருந்தும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்கின்றனர். அதேநேரம், தன்னுடைய பிக் பாஸ் முதல் சீசன் ‘ரூம் மேட்’டுகளில் பெரும்பாலானவர்களைத் திருமணத்துக்கு அழைத்திருக்கிறாராம் ஆரவ். லாக் டௌன் தளர்த்தப்பட்டதும் வரவேற்பு நிகழ்ச்சியும் இருக்குமென்கிறார்கள்.
ஆர(வ்)வாரம்!