கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, ஸ்டாண்ட் அப் காமெடியனாக கலக்கியவர் பழனி. அறந்தாங்கி நிஷா உடன் இணைந்து கலக்கப் போவது யார் மேடையை இவர் அதகளப்படுத்தியது ரசிகர்களால் கண்டிப்பாக மறக்க முடியாது.

தமிழ்ப் பேராசிரியரான இவர் தற்போது சீரியல், படங்கள் என பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான தும்பா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரைப்பட அனுபவம் குறித்தும், மீண்டும் ஒரு காமெடி நிகழ்ச்சியில் நிஷா – பழனி காம்போவை எப்போது பார்க்க முடியும் என்றும் நம்மிடம் பழனி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
``தும்பா படத்துல சின்ன கதாபாத்திரம்தான். ஆனாலும் முக்கியமான கதாபாத்திரம். நல்ல அனுபவத்தை கொடுத்துச்சு. என்னைப் பொறுத்தவரைக்கும் எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் பெஸ்டா பண்ணணும். அடுத்ததா அந்தோணி தாஸ் இசையமைத்து நடிக்கும் படத்துல அவருக்கு சகலையா நடிக்கிறேன்.
நாங்க இருவரும் சேர்ந்து அந்தப் படத்துக்காக ஒரு குத்தாட்டம் வேற போட்டிருக்கிறோம். அந்தோணி சூப்பரா ஆடுவார்., ஆனால் எனக்கு நடனம் ஆடி பழக்கமில்லை. ஆனால் அவருக்கு போட்டியா நானும் ஆடினேன். அதை பார்த்த இயக்குநர் அசந்துட்டார்.

சிவா மனசுல சக்தி, ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்களில் கெஸ்ட் ரோல் பண்ணிட்டு இருக்கேன். ராம்கி இயக்கும் தண்ணீர் சேமிப்பு பற்றிய அரசு விளம்பரப் படத்திலும் நடிச்சுட்டு இருக்கேன். நடிப்புல பிஸியா இருக்கறதால பேராசிரியர் பணியைத் தொடர முடியல. அதுதான் சின்ன வருத்தம். எனக்கு தமிழ் மீது ரொம்ப பற்று.
அதனால்தான் தமிழ்ப் பேராசிரியர் ஆனேன். மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது நமக்கு புதுபுது விஷயங்களை கற்றுக் கொடுக்கும். அதெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன். நிஷா – பழனி காம்போவில் காமெடி ஷோ அடுத்து எப்போ வரும்னு நிறைய பேர் கேட்டுட்டாங்க.
விஜய் டிவியில் விரைவில் சேம்பியன்ஸ்-2 தொடங்கப்போகுது. அதில் நானும் நிஷாவும் மீண்டும் களமிறங்குகிறோம். அடுத்ததா லொள்ளு சபா வரப்போகுது. அதிலும் பட்டயக்கிளப்ப தயாராகிறேன். முன்னர் லொள்ளு சபாவில் கலக்கிய சந்தானம் உள்ளிட்டோர் இன்னைக்கு வேற லெவலில் பிரபலமாகிட்டாங்க. அவங்கள மாதிரி எங்க டீமும் கலக்கும்’’ என்றவரிடம் சமீபத்தில் நிஷா, விழா ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதே. அது குறித்து உங்களின் கருத்து என்றோம்..

``எனக்கும் சரி நிஷாவுக்கும் சரி அரசியல் எல்லாம் சரிப்பட்டு வராது. காரணம் நாங்க அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தோஷப்படுத்தணும்னு நினைக்கிறோம். எனக்கும் இனப் பாசம், மொழிப்பற்று, அரசியல் பார்வைகள் இருக்கு. ஆனால் அவற்றை பொதுவெளியில் வெளிப்படுத்த விருப்பமில்லை. நிஷாவும் அப்படிதான். அவர் பிறந்தநாள் விழாவில் பேச அழைக்கப்பட்டாங்க. அங்கு அவங்க பேசியத சிலர் ஊதி பெருசாக்கிட்டாங்க. கஜா புயல் நிவாரணப் பணிகள் செய்தபோது அவரை உயர்த்திப் பேசியவர்கள் பலர் இந்த நிகழ்வுக்கு அவரை தாழ்த்தி பேசினாங்க. பல அரசியல் கட்சிகள் செய்யாததை நிஷா கஜா நிவாரணப் பணிகளின் போது செஞ்சாங்க. ஒரு அண்ணனா சொல்றேன் அவங்க மேல இந்த விஷயத்துல எந்தத் தப்பும் கிடையாது. அவங்க எப்பவுமே மக்களை சிரிக்க வைக்கதான் நினைப்பாங்க. என்னோட குறிக்கோளும் அதுதான்’’ என்றார் தெளிவாக.