சின்னத்திரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெப்சீரிஸ் பக்கம் நகர்ந்து வருகிறார் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன். இந்தி வெப்சீரிஸ்களை வெளியிட்டு வந்த 'ஹங்கமா' ஒ.டி.டி. தளம் தமிழில் முதன் முறையாக 'மாயத்தோட்டா' என்கிற வெப் சீரிஸை வெளியிட்டிருக்கிறது. இதில் குமரன்தான் ஹீரோ.

வெப் சீரிஸ் குறித்து குமரனிடம் பேசினோம்.`` எஸ்.ஜே. சூர்யா சார் கூட சேர்ந்து நான் பண்ணின `வதந்தி' எனக்கு ஓரளவு நல்ல ரீச்சைத் தந்தது. பல வருடங்களாக சினிமாவை இலக்காகக் கொண்டு ஓடிட்டிருக்கேன். ஆனா சினிமாவே வடிவம் மாறி ஓடத் தொடங்கிட்ட காலம் வந்துட்டதால 'வெப் சீரிஸ்' கூட நல்லாதானே இருக்குனு தோணுது. துப்பறிகிற போலீஸ் அதிகாரியா எஸ்.ஜே. சூர்யா சார் வந்த 'வதந்தி' பார்த்துட்டுத்தான் 'மாய தோட்டா'வுக்கு என்னைக் கூப்பிட்டாங்க.
இந்த சீரிஸ்ல என்னுடைய கேரக்டர் முக்கிய அரசியல் தலைவர்களுக்குப் பாதுகாப்பு தருகிற `இசட்' பிரிவில் சீஃப் செக்யூரிட்டி ஆபீசர்.
அதனால ஆர்மி கட் உள்ளிட்ட கெட்-அப் வேணும்னு சொன்னாங்க. ஒருபக்கம் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'ல கைலி பணியனுடன் வந்து போயிட்டே இன்னொரு பக்கம் இந்த கெட்-அப்புக்கு மாற வேண்டி இருந்தது.
இந்த சீரிஸ்ல நடிக்க 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் யூனிட்டுமே எனக்கு ரொம்பவே உதவியா இருந்தாங்க.

இந்த ஆக்ஷன் த்ரில்லர் சப்ஜெக்ட்ல லீட் ரோல்ங்கிறதால நிறைய ஹோம் ஒர்க் பண்ணினேன். இசட் பிரிவுன்னா என்ன, எதுக்குக் கொண்டு வந்தாங்க, அவங்களுடைய வேலையின் தன்மை, இவங்க ஆயுதங்களைக் கையாள்கிற விதம்னு ஒவ்வொரு விஷயமாத் தேடித் தேடித் தெரிஞ்சுகிட்டேன். 'வதந்தி' பண்ணினப்ப உடல் எடையை கூட்ட வேண்டியிருந்தது. இதுக்காக மறுபடி எடையைக் குறைச்சிருக்கேன். மொத்தம் ஆறு எபிசோடுகள் வெளியாக இருக்கிற 'மாய தோட்டா'வும் நிச்சயம் நல்ல ஒரு வரவேற்பைத் தரும்னு நம்பறேன்' என்கிறார் குமரன். 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடருக்குப் பிறகு முழுக்க முழுக்க வெப்சீரிஸ், சினிமா எனக் கிளம்பி விடுவார் என்கின்றனர்.
இயக்குநர் நந்தா இயக்கியிருக்கும் 'மாய தோட்டா' மொத்தம் ஆறு எபிசோடுகள். குமரன் தவிர, அமித் பார்கவ், சைத்ரா ரெட்டி ஆகிய சின்னத்திரை பிரபலங்களும் இதில் நடித்திருக்கிறார்கள்.