ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'பூவே பூச்சூடவா' சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் ரேஷ்மா. அதே சீரியலில் ஹீரோவின் தம்பியாக நடித்தவர் மதன் பாண்டியன்.
இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில், இந்த வருடம் அதாவது 2021 பிறந்த ஜனவரி முதல் நாள் தங்களது காதலை ஊருக்குத் தெரியப்படுத்தினர்.

‘’பொதுவா எல்லாரும் புத்தாண்டுத் தீர்மானம் எடுத்துப்பாங்க. ‘எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்’கிறதுதான் ஒவ்வொருத்தருடைய வேண்டுகோளா இருக்கும். அதேபோலத்தான் நானும் மகிழ்ச்சியான ஒரு செய்தியைச் சொல்லி என்னுடைய ரசிகர்கள் ப்ளஸ் ரேஷ்மாவுடைய ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் தரலாம்னு நினைச்சேன்.
அதனாலதான் கொஞ்சம் வெயிட் பண்ணாலும் பரவால்லனு காத்திருந்து சரியா புத்தாண்டு பிறந்த அந்த நிமிடத்துல எங்க கல்யாணச் செய்தியை அறிவிச்சிருக்கோம்’’ என அப்போது சொல்லியிருந்தார் மதன்.

காதல் திருமணம் என்றாலும் இருவர் வீட்டிலும் பெற்றவர்களின் சம்மதம் இவர்களின் காதலுக்குக் கிடைத்தது.
தொடர்ந்து மே மாதம் திருமணம் இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. கோவிட் இரண்டாவது அலையின் ஊரடங்குக் காரணமாக அப்போது தள்ளிப் போடப்பட்ட நிலையில், இன்று காலை (15/11/21) சென்னை மதுரவாயலில் உள்ள பிரபலமான ஷூட்டிங் ஸ்பாட்டான எஸ்.பி.பி. கார்டனில் இவர்களது திருமணம் எளிமையாக நடந்தது.
திருமணத்தில் மதன் மற்றும் ரேஷ்மா வீட்டினர் மற்றும் இரண்டு தரப்பிலிருந்தும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
சின்னத்திரை நட்சத்திரங்களுக்காக இன்று மாலை அதே இடத்தில் வரவேற்பு நடைபெற உள்ளது.
வாழ்த்துகள் ரேஷ்மா - மதன்!