சன் டிவி-யில் பிரியமானவள் சீரியல் முடிந்த கையோடு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'பூவே பூச்சூடவா' தொடரில் கமிட்டாகிவிட்டார் கார்த்திக் வாசு. துறுதுறு கடைக்குட்டி பிரபாவாக பிரியமனவள் சிரியலில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர், தற்போது பூவே பூச்சூடவா சீரியலில் அமைதியே உருவான சிவா கேரக்டரில் நடித்து கொண்டிருக்கிறார். விஜய் டிவி ஆடிஷன், வெளிநாட்டு வேலை, சீரியல் ரீ எண்ட்ரி, நெகடிவ் கமெண்ட்ஸ் என பல்வேறு அனுபவங்களை நம்மிடம் கலகலப்பாக பகிர்ந்து கொண்டார் கார்த்திக் வாசு.

"நான் பொறியியல் பட்டதாரி. சென்னைதான் சொந்த ஊர். கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை சீரியலுக்கு ஆடிஷன் நடப்பதாகக் கேள்விப்பட்டு விளையாட்டாகத்தான் விஜய் டிவி ஆடிஷனுக்கு போனேன். எனக்கு நம்பிக்கையே இல்லை நான் செலக்ட் ஆவேன்னு. ஆடிஷன் நடந்த ஹாலில் நாங்கள் ஒரு மூன்று பேர் சேர்ந்து எல்லாரையும் ஓட்டிக்கிட்டு கொண்டிருந்தோம். எங்கள கவனிச்ச நடுவர்கள் எங்களை வந்து பெர்ஃபார்ம் பண்ண சொன்னாங்க. என்கூட சேர்ந்து குறும்புத்தனம் பண்ணிட்டு இருந்த இருவரும் செமய பெர்ஃபார்ம் பண்ணினாங்க. இரண்டு பேரும் வித்தியாசமான கான்செப்ட் எடுத்து பெர்ஃபார்ம் பண்ணி அசத்திட்டாங்க. அடப்பாவிங்களா என்கூடத்தான இருந்தீங்க, எப்படி இப்படின்னு எனக்கு ஒரே அதிர்ச்சி. அடுத்ததா நான் பெர்ஃபார்ம் பண்ணனும். மனசுல பயம். ஒருகட்டத்தில் என்னதான் ஆகுது பாத்துடுவோம்னு நானும் போய் எனக்கு அந்த ஸ்பாட்டில் தோன்றிய ஒரு கான்செப்ட்டை பெர்ஃபார்ம் பண்ணேன்.
நான் எல்லாரையும் கலாய்ச்சிட்டு இருந்ததால என்ன பெர்ஃபார்ம் பண்ணவிடாம நிறையப் பேர் கலாய்சாங்க. அதையெல்லாம் தாண்டி பெர்ஃபார்ம் பண்ணேன். அதன் பிறகு செலக்ட் ஆவேன்னு நம்பிக்கையே இல்லை. ஆனால் இரண்டு மூன்று நாளில் அழைப்பு வந்துருச்சு. 'கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை' சீரியலில் நான் நடிக்கத் தேர்வாகி இருந்தேன். சந்தோஷம் தாங்க முடியல. இப்படிதான் என் சீரியல் என்ட்ரி நடந்தது. கல்லூரியின் கதை சீரியல் நல்ல அனுபவத்தைக் கொடுத்துச்சு. அந்த சீரியல் முடியும்போது எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைச்சது. அதே சமயம் விஜய் டிவில இன்னொரு சீரியலிலும் முக்கிய ரோல் கிடைத்தது. எந்தப் பக்கம் போறதுன்னு தெரியாம முழிச்சேன்.

எங்க வீட்ல இன்ஜினியரிங் கரியர்தான் முக்கியம்னு சொன்னாங்க. அதனால வெளிநாட்டு வேலைக்கு போலாம்னு முடிவு பண்ணேன். ஒரு ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன் .அதன் பிறகு சென்னைக்கு வந்தேன். மீண்டும் விஜய் டிவியில் ஒரு முக்கிய சீரியல்ல வாய்ப்பு கிடைச்சது. என்னதான் இருந்தாலும் நம்ம ஊர்ல இருக்க மாதிரி வராது. அதனால வெளிநாட்டு வேலையை விட்டுட்டு திரும்பவும் சீரியலுக்கே வரலாம்னு முடிவு பண்ணினேன். வீட்ல கொஞ்சம் எதிர்ப்பு வந்தது. ஆனால் அதன்பிறகு புரிஞ்சிகிட்டாங்க. அப்புறம் ஒரு ஆறு மாசம் என்னை நானே தயார் பண்ணிக்கிட்டேன். ரெகுலராக ஜிம்முக்கு போனேன். ஃபிட்டானேன். அதன் பிறகுதான் சன் டிவி-யில 'பிரியமனவள்' சீரியல்ல ஒரு ரீப்ளேஸ்மெண்ட் ரோல் இருக்கிறதா சொன்னாங்க. நானும் ஓகே சொன்னேன். பிரபா என்னும் கேரக்டர்ல நடிக்க கமிட் ஆனேன். கல்லூரியின் கதை சீரியலில் எனக்கு ஜோடியா நடிச்ச ஹரி பிரியாதான் இந்த சீரியலிலும் எனக்கு ஜோடி. ரொம்ப நாளைக்கு பிறகு என்னைப் பார்த்த ஹரி பிரியாவுக்கு அடையாளம் தெரியல. முன்பு சுருள் முடி வெச்சிகிட்டு ஒல்லியா இருப்பேன். இப்போ ஃபிட்டா இருக்கேன். அவங்க அங்க இருந்தது எனக்கு கொஞ்சம் சப்போர்டிவ்வா இருந்துச்சு.
"பிரியமனவள் ரீப்ளேஸ்மெண்ட் ரோல் அப்படிங்கறதால முதலில் நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது உண்மைதான். `எங்க பழைய பிரபாவை வர சொல்லுங்க. இவர் செட் ஆகலை..’ போன்ற நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது. அப்புறம் ஏன் நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருது அப்படின்னு கவனிக்க ஆரம்பிச்சேன். மக்கள் என்ன கமெண்ட் பண்றாங்கன்னு சோசியல் மீடியாவில் கமெண்ட்ஸ் பார்த்தேன்.

பிரபா என்ற கேரக்டர் ரொம்ப முன்கோபப்படுற கேரக்டர். துறுதுறுன்னு எப்பவுமே ஒரு சேட்டை பண்ணிட்டு இருப்பாரு. அந்த கேரக்டரா நான் மாற ஆரம்பிச்சேன். அந்த கேரக்டரை உள்வாங்கி நடிக்க ஆரம்பிச்சேன். வீட்ல கூட என் மனைவியிடம் ரொம்ப கோபப்படுவேன். அந்த அளவுக்கு அந்த கேரக்டரா மாறினேன். பிரியமனவள் சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது சவாலான சில காட்சிகளிலும் நடிச்சேன். ரசிகர்களிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ்.
பூவே பூச்சூடவா சீரியலில் நான் நடித்த முதல் எபிஸோட் டிவியில் வந்தபோது, நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ். `எங்க சிவா பாஸ் ரோலில் இவரா.. அப்படி இப்படின்னு கமெண்ட்ஸ் வந்துச்சு. பிரியமனவள் சீரியலில் நான் ரொம்ப துறுதுறு கேரக்டர் ஆனால் பூவே பூச்சூடவா அதற்கு நேரெதிராய் இருந்துச்சு. சிவா அப்படிங்கிற கேரக்டர் அதிகமா பேசவேமாட்டார். இப்போ கொஞ்சம் கொஞ்சமா சிவா கேரக்டர்குள்ள போக ஆரம்பிச்சிட்டேன். இப்போ நிறைய பாசிடிவ் கமெண்ட்ஸ் வருது. அதுவே எனக்கு போதும்’’ என்றார்.

"பூவே பூச்சூடவா சீரியலில் சக்தி கேரக்டர்கூட உங்க கெமிஸ்ட்ரி அள்ளுகிறது. அந்த ரொமான்ஸ் சீன்ஸ் பார்த்து உங்க மனைவி ரியாக்ஷன் என்ன?" என்னும் வில்லங்கமான கேள்வியை முன்வைத்தோம்.
'பூவே பூச்சூடவா', 'பிரியமனவள்' சீரியலில் எனக்கு ஜோடியா நடிச்ச ஹரிப்ரியா எனக்கு ரொம்பவே நல்ல ஃப்ரெண்ட். என் மனைவிக்கும் ஃபிரண்ட். எங்க காதலுக்கு ஹெல்ப் பண்ணி இருக்காங்க. அதனால என் மனைவிக்கு அவங்களோட நான் ஜோடியா நடிச்சப்போ பெருசா தெரியல.

ஆனா இப்போ பூவே பூச்சூடவா சீரியலில் நானும் சக்தியும் கண்களாலேயே பேசும் காட்சிகள் நிறையா வரும். அதை பார்த்துட்டு "என்ன பப்பு இப்படி ரொமான்ஸ் பண்ற. இப்படி பார்க்கிற’’ன்னு செல்லமா கோபப்பட்டாங்க. அட இது சீரியலுக்கு தேவைம்மா. கோவப்படக்கூடாதுன்னு சமாதானப்படுத்தினேன். உண்மையை சொல்லணும்னா எனக்கு இந்த ரோல் கிடைச்சுதுக்கு என்னவிட என் மனைவிதான் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.
அண்மையில் என் மனைவியோடு காரில் போயிட்டிருந்தேன். திடீரென காரை நிறுத்தச் சொன்னாங்க. ஏன் திடீர்னு நிறுத்த சொல்றாங்கன்னு பார்த்தா வெளியே பூவே பூச்சூடவா பேனர் வெச்சிருந்தாங்க. அதில் நானும் சக்தியும் இருந்தோம். காரில் இருந்து இறங்கி பூவே பூச்சூடவா பேனர் முன்னாடி போய் நின்னு செல்ஃபி, வீடியோஸ், போட்டோஸ்னு எடுக்க ஆரம்பிச்சாங்க.

ஏன் இப்படி பண்ற சுத்தியிருக்கவங்க என்ன நினைப்பாங்கன்னு திட்டினேன். நீ சும்மா இரு. இதெல்லாம் எவ்வளவு ப்ரவுடு மொமண்ட் தெரியுமா? இந்த மாதிரி ஒரு லீட் ரோலில் நடிக்கணுன்னுதானே ஆசைப்பட்ட! இப்போ நிறைவேறிருக்கு. என் பப்பு பெரிய பேனரில் இருப்பது எவ்வளவு சந்தோஷம்ன்னு நெகிழ்ந்துட்டாங்க’’ என்றார் கண்களில் காதல் மின்ன!