`செம்பருத்தி' தொடரின் மூலம் பரிச்சயமானவர் பரதா. சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு விழா நடந்திருக்கிறது. பரதாவையும் அவருடைய கணவர் பரத்தையும் அவர்களுடைய வீட்டில் சந்தித்தோம். அவருக்கே உரித்தான புன்னகையுடன் நம்மை வரவேற்று பேசத் தொடங்கினார்.
"நாங்க ரெண்டு பேரும் மீடியா ஃபீல்டுல இருக்கிறதால கோவிட் சமயத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. நல்லா போயிட்டு இருந்த புராஜக்ட்ஸ் எல்லாம் திடீர்னு ஸ்டாப் ஆச்சு. உடனடியா வேற வேலையும் கிடைக்கல. அது ரொம்ப அதிக மன அழுத்தத்தைக் கொடுத்துச்சு. பொருளாதார ரீதியா ரொம்பவே கஷ்டப்பட்டோம். கோவிட் சமயத்தில் நகை, பணம்னு நிறையவே இழந்தோம். திடீர்னு மீடியா இல்லைன்னா நம்ம வாழ்க்கை என்னாகுங்கிறதை கோவிட் எங்களுக்கு கற்றுக் கொடுத்துச்சு. நம்மளுடைய பேஷனுக்காக ஓடுறது ஓகே தான். ஆனா, அதே நேரம் நமக்குன்னு சில கமிட்மென்ட்ஸ் இருக்கு. அதுக்காக நிரந்தரமான ஒரு வருமானம் நமக்கு நிச்சயம் தேவைன்னு எங்களுக்குப் புரிஞ்சது. அப்பதான் பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணினோம். நான் புரொபஷனல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் & ஹேர் ஸ்டைலிஸ்ட்ங்கிறதனால அது சம்பந்தமா ஒரு `Mithra's BB Acadamy'னு நடத்திட்டு வர்றோம்" என்றவரிடம் `செம்பருத்தி' சீரியலில் உங்க கதாபாத்திரத்தின் பெயரையே இந்த அகாடமிக்கு வச்சிருக்கீங்க. அப்பவே இந்தக் கேரக்டர் உங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷல்னு தெரியுது. அதைப் பற்றிச் சொல்லுங்கன்னு கேட்டோம்.
"செம்பருத்தி சீரியல்ல முதலில் நான் நடிக்கும்போது பயங்கரமா நெகட்டிவ் கம்மென்ட்ஸ் வந்துட்டே இருந்தது. நான் எப்படி நடிச்சாலும் என்னைத் திட்டிட்டே இருக்காங்கன்னு டீம்கிட்ட, சேனல்கிட்ட எல்லாம் சொல்லி அழுதிருக்கேன். ஆனா, மூணு மாசத்துக்குப் பிறகு மித்ராவுக்கு ஆடியன்ஸ் கொடுத்த அன்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. எனக்குன்னு நிறைய ஃபேன் பேஜஸ் ஆரம்பிச்சாங்க. வெளியில என்னைப் பார்த்தாலே கூட்டம், கூட்டமா வந்து செல்பி எல்லாம் எடுத்துப்பாங்க. அதெல்லாமே செம அனுபவம்" என்றவர் பிரக்னன்சி குறித்துப் பேசினார்.
"கோவிட் சமயத்தில் கர்ப்பமானேன். அப்ப ஹெல்த் கான்சியஸா இல்லாம, மெச்சூரிட்டி இல்லாம உடல்நலனில் கொஞ்சம் கவனக் குறைவா இருந்தேன். அதனால, மூணு மாசத்துல குழந்தை அபார்ஷன் ஆகிடுச்சு. மனசளவுல அதை எங்களால ஏத்துக்க முடியல. ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிட்டோம். அதுக்குப் பிறகு அடுத்த குழந்தை எப்ப வரும்னு ரொம்பவே ஏங்கிப் போய் இருந்தோம். கர்ப்பம் உறுதியானதும் எங்களுடைய எமோஷனை கண்ணீர் மூலமாகத்தான் வெளிப்படுத்தினோம் என நெகிழ்ந்தவரிடம் `தாலாட்டு' சீரியலில் இருந்து விலகியது குறித்துக் கேட்டோம்.
"தாலாட்டு சீரியலில் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் நடிச்சேன். அந்த சீரியலில் பாசிட்டிவ் ரோல் பண்ணினேன். பலரும் மித்ரா மாதிரி பவர்ஃபுல் ஆன நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிச்சிட்டு ஏன் கோகிலா மாதிரி பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறீங்கன்னு கேட்டாங்க. அந்த கேரக்டர் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருந்துச்சு. பிரக்னன்சி கன்ஃபார்ம் ஆன பத்தே நாளில் சீரியல்ல இருந்து தூக்கிட்டாங்க. கர்ப்பமா இருக்கோம்னு சொன்னா கொஞ்சம் கம்ஃபர்டபுள் கொடுப்பாங்க... புரிஞ்சுப்பாங்கன்னு நினைச்சேன். தாலாட்டு சீரியலில் நடிச்ச அதே நேரத்துல ஜீ தமிழில் `ரெட்டை ரோஜா' சீரியலிலும் நடிச்சிட்டு இருந்தேன். அந்த சீரியலில் போலீஸ் கேரக்டர் பண்னினேன். போலீஸ் கேரக்டர் பண்றது கஷ்டம்.. சரி அந்த சீரியலில் இருந்து வேணும்னா விலகிடலாம்னு நினைச்சேன். தாலாட்டு மட்டும் பண்ணுவோம்னு நானாகவே நினைச்சிட்டு இருந்தேன்.
கர்ப்பமா இருக்கிறதை சொன்னதுல இருந்து Non - Sync ஆகவே ஷூட்டிங்ல இருந்துச்சு. என்னை அந்த செட்ல சப்போர்ட் பண்ணுவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அது அங்கிருந்து எனக்கு கிடைக்கல. ஹாஸ்பிடலுக்கு செக்கப்பிற்காக தொடர்ந்து போக வேண்டியிருந்ததால பத்து நாள் லீவு கேட்டேன். ஆனா, அதுல 6 நாள் வரைக்கும் சீன் இருக்குன்னு சொன்னதால போய் நடிச்சுக் கொடுத்தேன். கடைசி நாள் முடியுறப்ப நாங்களே கூப்பிடுறோம்னு சொன்னாங்க. சரி டிராக் மாத்தப் போறாங்க போல ஒரு வாரம் கழிச்சு மறுபடி கூப்பிடுவாங்கன்னு தான் நினைச்சேன். என்னை அந்த சீரியலில் இருந்து தூக்கிட்டாங்கன்னே எனக்குத் தெரியல. 6 மாசம் வரைக்கும் என்னை கூப்பிடவும் இல்ல. என் கேரக்டருக்குப் பதில் வேற ஒருத்தரை போடவும் இல்ல. எனக்கு பதிலா புது கேரக்டரைக் கொண்டு வந்துட்டாங்க. 6 மாசம் கழிச்சு சேனலுக்கு ஃபோன் பண்ணி கேட்டேன். `என்னங்க சொல்றீங்க உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லை.. நீங்க பிசினஸ்ல பிஸியாகிட்டீங்கன்னு சொன்னாங்களே!'ன்னு சொன்னாங்க. என்னுடைய கரியர் வேற, பிசினஸ் வேற! என்னுடைய ட்ரீம் இந்த சீரியல் துறைதான்னு சொன்னேன்.
எந்த சீரியல் நான் வேண்டாம்னு நினைச்சேனோ அந்த `ரெட்டை ரோஜா' சீரியலைத் தொடர்ந்து பண்ணினேன். எனக்கு இப்ப ஒன்பதாவது மாசம். 8-வது மாசம் வரைக்கும் அந்த சீரியலில் நடிச்சேன். ஸ்டண்ட் பண்ணினேன், பைக் ஓட்டினேன்.
யூனிபார்ம் போட்டு நடிச்சேன். என்னை ஒட்டுமொத்த செட்டும் நல்லா கவனிச்சிக்கிட்டாங்க" என்றார்.