
‘பாரதி கண்ணம்மா'வுல என்னைப் பார்த்துட்டுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' தொடர்ல ஹீரோயினா நடிக்கக் கேட்டாங்க.
`நம்மூர் நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்பளிக்காமல் கேரளா, கர்நாடகா எனப் பக்கத்து மாநிலங்களில் ஹீரோ, ஹீரோயின்களைத் தேடிவருகின்றனர்...'
தமிழ் சீரியல் ஏரியாவில் சமீபகாலமாக உரத்துக் கேட்கும் குமுறல் இது. இப்போதைய பிரைம் டைம் சீரியல்களை எடுத்துக்கொண்டால் தமிழ் நட்சத்திரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி எண்ணும்போது நம் கண்ணில் தென்பட்டார் கண்மணி மனோகரன். ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியலின் நாயகி.
‘‘ஆமாங்க, நான் அக்மார்க் தமிழ்ப் பொண்ணு. சின்ன வயசையெல்லாம் திருச்சியில கழிச்சுட்டு இப்ப சென்னை வந்துட்டேன். எத்திராஜ் கல்லூரியில் ‘பேங்கிங் மேனேஜ்மென்ட்' படிச்சேன். படிப்பு முடிஞ்சதும் தனியார் நிறுவனத்துல கொஞ்ச நாள் வேலையும் பார்த்தேன்.
அந்த வேலை லேசா போர் அடிக்கிற மாதிரி தெரிஞ்சதும் மாடலிங் பண்ணலாம்னு தோணுச்சு. மாடலிங் சான்ஸ் தேடிட்டிருந்த சமயத்துலதான் ‘சீரியல் பண்றீங்களா'ன்னு கேட்டு ‘பாரதி கண்ணம்மா' வாய்ப்பு வந்தது. ஆடிஷன்ல கலந்துக்கிட்டுத் தேர்வானேன். அதுதான் என் முதல் சீரியல்'' - அழகாக அறிமுகப்படுத்திக்கொண்டவரிடம் பேசினேன்.


``நல்லா போயிட்டிருந்த அந்த சீரியல்ல இருந்து வெளியேறியது ஏன்? எப்படி எடுத்தீங்க அந்த ரிஸ்க்கான முடிவை?’’
‘‘எனக்கு முதன்முதலா ரசிகர்கள் கிடைக்கக் காரணமான சீரியல் அது. இன்னைக்கும் நல்ல ரேட்டிங் கிடைக்குதுன்னுதான் சொல்றாங்க. அந்த சீரியல் நாள்களை மறக்க மாட்டேன். அதே சீரியல்தானே எனக்கு அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான வாய்ப்பையும் தந்தது.
‘பாரதி கண்ணம்மா'வுல என்னைப் பார்த்துட்டுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' தொடர்ல ஹீரோயினா நடிக்கக் கேட்டாங்க. எத்தனையோ பேர் வருஷக்கணக்குல நடிச்சும் ஹீரோயின் வாய்ப்பு அமையாம வருத்தப்பட்டுட்டு இருக்காங்கன்னு எனக்குத் தெரியும். அதை நினைச்சுப் பார்க்கிறப்ப எனக்கு இது கடவுளாப் பார்த்துத் தந்த வாய்ப்பில்லையா? நீங்க சொன்ன மாதிரி ரிஸ்க்தான்னு எனக்குத் தெரியும். ஒரு பஞ்ச் டயலாக் சொல்வாங்களே, ‘ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி'ன்னு! அந்த டயலாக்கை மனசுக்குள் நினைச்சுக்கிட்டு, துணிஞ்சு ‘பாரதி கண்ணம்மா'வை விட்டு வெளியில் வந்தேன். தப்பான முடிவு எடுக்கலைங்கிறதை இப்ப தெளிவா தெரிஞ்சுகிட்டேன்.''


``நெகட்டிவ் கேரக்டரில் நடிச்சதுக்காகத் திட்டின ரசிகர்களெல்லாம் இப்ப பாசத்தைக் காட்டறாங்களா?’’
‘‘வயசான, அதுவும் கிராமப்புற மக்கள்னா சீரியலுடன் ஒன்றிப்போயிடுறாங்க. இப்பவும் கிராமத்துப் பக்கம் ஷூட் போனா, ‘பாரதி கண்ணம்மா' அஞ்சலி பற்றியே விசாரிக்குறாங்க. நெகட்டிவ் கேரக்டர்கள் மக்கள் மனசுல நல்லாப் பதியுது. அதேநேரம் என் ரசிகர்கள் எல்லாருமே எங்கிட்ட கேட்டிட்டிருந்த ஒரு கேள்வி ‘நீங்க எப்ப ஹீரோயின் ஆவீங்க?’ அது நடந்திடுச்சு. சீரியஸாகவே என்னை முந்தின சீரியல்ல திட்டிட்டிருந்தவங்களையெல்லாம் தேடிப் பிடிச்சுப் பேசினேன். இப்ப அவங்க என் பழைய கேரக்டர்ல இருந்து வெளியில வந்துட்டாங்க.''


``இப்ப சீரியலில் ‘கட்டினா வாத்தியாரைத்தான் கட்டிப்பேன்'னு ஒற்றைக் காலில் நிக்குறீங்க. நிஜத்துல மனசுல என்ன எண்ணம் இருக்கு. கட்டிக்கொள்ளப் போகிறவர் என்னவா இருக்கணும்னு நினைக்கறீங்க?’’
‘‘இந்த வேலைதான் பார்க்கணும்னு சொல்ல மாட்டேன். ஆனா ரெண்டு கண்டிஷன்ஸ் இருக்கு. ஒண்ணு, குணத்துல நேர்மையானவரா இருக்கணும். அடுத்தது என்னை லவ் பண்ணணும்.''