
ஆர்யனுடன் எனக்கு ஏற்கெனவே நல்ல அறிமுகம் இருக்கு. பாடறது எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம். அவரும் முறைப்படி இசை கத்துக்கிட்டவர்
கொரோனாவுக்கு முன்பாக ஒளிபரப்பாகத் தொடங்கிய ‘மகராசி' தொடர் 750 எபிசோடுகளைக் கடந்திருக்கிறது. தொடரில் இடையில் வந்து சேர்ந்தாலும் ‘பாரதி' கதாபாத்திரத்தில் தன்னை நிலைநிறுத்தி, சீரியலின் வரவேற்பு குறையாமல் பார்த்துக் கொண்ட ஸ்ரீத்திகாவை படப்பிடிப்புத் தளத்தில் இடைவேளை ஒன்றில் சந்தித்தேன்.
‘‘'பொதுவா சீரியலுடைய வெற்றியில் அதில் நடிக்கிற ஜோடியின் பங்கு முக்கியமானது. ரசிகர்களுக்கு ஒரு ஜோடியை ரொம்பவே பிடிச்சுப் போயிடுச்சுன்னா, அந்த சீரியல் முடியறவரை அந்த ஜோடி இருந்தாகணும்ங்கிற நிலைமை இன்னைக்கு உருவாகியிருக்கு. ஜோடிகளுக்கிடையில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி, கதை சூடுபிடிக்கிற நேரத்துல ஜோடியில யாராவது ஒருத்தர் சீரியல்ல இருந்து விலகினாலும் அது பெரிய பாதிப்பை உண்டாக்கும். அதனால இந்த சீரியல்ல ஆர்யனுடன் நடிச்சிட்டிருந்த திவ்யா விலகினதும் என்னை நடிக்கக் கேட்டப்ப கொஞ்சம் யோசிச்சேன். ‘ஆர்யன்-திவ்யா'ன்னு செட் ஆகியிருந்த ரசிகர்களை, ‘ஆர்யன்-ஸ்ரீத்திகா' ஜோடியை ஏத்துக்க வைக்கணுமே! ஆனா ஆர்யன், ‘வாங்க பார்த்துக்கலாம்'னு சப்போர்ட்டா இருந்தார். இந்த சீரியலுக்கு வர்றதுக்கு முன்னாடியே ஆர்யனை எனக்குத் தெரியும்கிறது சாதகமான விஷயமா இருந்தது. சிரமப்படாம எங்களை ஏத்துக்க வச்சிட்டோம்'' என்றவரிடம் தொடர்ந்து பேசினேன்.

தொடரின் ஹீரோ எஸ்.எஸ்.ஆர்.ஆர்யனுடன் ரீல்ஸ், அது இதுன்னு செட்டில் செம ஜாலியா இருக்கீங்க போல?
‘‘அதான் சொன்னேனே. ஆர்யனுடன் எனக்கு ஏற்கெனவே நல்ல அறிமுகம் இருக்கு. பாடறது எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம். அவரும் முறைப்படி இசை கத்துக்கிட்டவர். அதனால் மியூசிக் தொடர்பா எனக்கு நிறைய விஷயங்களை சொல்லித் தர்றார். ஸ்பீக்கர் கொண்டு வந்திடுறார். பிரேக் நேரத்தில் செட்டில் ஒரே பாட்டுதான். பொதுவா ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு சீன் இல்லைன்னா ஓரமாப் போய் தனியா உட்கார்ந்து பாட்டு கேக்கறது, புக் படிக்கிறதுனு இருப்பவள் நான். இந்த சீரியல்ல அந்த மாதிரி ஆளா நான் இல்லை. இந்த மாற்றம் எனக்கும் பிடிச்சிருக்கு.''
இப்ப தெலுங்கு சீரியலிலும் நடிக்கறீங்கதானே?
‘‘ஆமா. ‘பாண்டவர் இல்லம்' தொடரின் தெலுங்கு வெர்ஷனில் நடிக்க வாய்ப்பு வந்தது. தெலுங்கில் இதுவரை பண்ணாததால் சம்மதிச்சு நடிச்சிட்டிருக்கேன். அங்கேயுமே நல்ல வரவேற்பு கிடைக்குது. மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வாரம் சென்னையிலும் இரண்டாவது மற்றும் நான்காவது வாரம் ஐதராபாத்திலுமா ஷூட்டிங் போயிட்டிருக்கு.''
இப்ப வர்ற சில ஆர்ட்டிஸ்டுகள் குறுகிய காலத்தில் சீரியலில் இருந்து போயிடுறாங்க. தொடர்ந்து முன்னணி சேனலில் பத்து வருஷத்துக்கும் மேலாக நடிச்சிட்டிருக்கீங்க எப்படி?
‘‘காலையில ஷூட்டிங் தொடங்கறதுக்கு முன்னாடியே போயிடுவேன். கோலம் போட்டது கூட நீங்கதானாமேனு கலாய்ச்சிருக்காங்க. நம்ம நேரத்தை கூடுதலா எடுத்துக்கிட்டா கூட சீரியஸா எடுத்துக்காம நடிச்சுக் கொடுத்துட்டுதான் கிளம்புவேன். இதுதான் நான் ஃபாலோ பண்ற ஒரு விஷயம். இது ஒர்க் அவுட் ஆகுதோ என்னவோ?''
இயக்குநர் திருமுருகன் மீண்டும் சீரியல் இயக்கப் போறதாப் பேச்சு அடிபடுதே?
‘‘நானும் கேள்விப்பட்டேன். ஆனா ஒருவேளை என்னைக் கூப்பிட்டா நான் பண்ண முடியாதுன்னுதான் தோணுது. இந்த ரெண்டு புராஜெக்டுமே இப்ப சரியா இருக்கு.''