
சின்னத்திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ளும் பிரமாண்ட விருது வழங்கும் விழா ஒன்று ஜூன் மூன்றாம் வாரத்தில் துபாயில் நடக்க இருந்தது

`ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கியது முதலே திருக்கழுக்குன்றத்தில்தான் ஷூட்டிங் நடந்துவந்தது. இந்த ஊரின் அவுட்டரில் வயல்வெளியை ஒட்டி அமைந்துள்ள ஒரு பெரிய வீடுதான் லொகேஷன். இப்போது கொரோனா பீதியினாலும் எந்த நேரமும் லாக் டௌன் போடப்படும் என்ற பயம் இருப்பதாலும் சென்னை மயிலாப்பூருக்கு ஷூட்டிங்கை மாற்றிவிட்டார்கள். “பெங்களூரிலேயே வளர்ந்து வந்ததால வில்லேஜ் வாழ்க்கை எனக்கு அமையலை. அந்தக் குறை இந்த சீரியல்ல கமிட் ஆன பிறகுதான் தீர்ந்தது. இப்ப அது மிஸ் ஆகிடுச்சு” என ரொம்பவே ஃபீல் செய்கிறார் ‘ராசாத்தி’ அஸ்வினி.
சின்னத்திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ளும் பிரமாண்ட விருது வழங்கும் விழா ஒன்று ஜூன் மூன்றாம் வாரத்தில் துபாயில் நடக்க இருந்தது. சீரியல் நட்சத்திரங்களுடன் ஹரிஹரன் உள்ளிட்ட சில செய்திச் சேனல் நெறியாளர்களும் விருது பெற ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள், கொரோனா இரண்டாம் அலையால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமே தனக்கு ஹீரோ வாய்ப்பு கிடைத்ததாகச் சொல்கிறார் கணேஷ் வெங்கட்ராம். இவர் ஹீரோவாக நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். படத்தில் கணேஷ் வெங்கட்ராமின் ஜோடி பார்வதி நாயராம்.
ஆங்கர் ஜாக்குலினிடமிருந்து சீக்கிரமே டும் டும் டும் செய்தி வரலாமெனத் தெரிகிறது. வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி விட்டார்களாம். ‘அப்போ இவ்ளோ நாளா யாரையும் காதலிக்காமலா இருந்தீங்க; நம்பற மாதிரி இல்லையே’ எனக் கேட்டுக் கலாய்த்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.



‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த மூக்குத்தி முருகன், தற்போதும் தர்மபுரி அருகேயுள்ள தன் சொந்த கிராமத்தில்தான் வசித்துவருகிறார். ‘சினிமாவுல பாடக் கூப்பிட்டா சென்னைக்கு வருவேன்; மத்த நாள்கள்ல ஊருல படம் வரையறதும் பக்கத்துக் கிராமங்கள்ல பாட்டுக் கச்சேரி இருந்தா போறதுமாத்தான் பொழுது போயிட்டிருந்தது. இப்ப கொரோனாவால கச்சேரி நடத்தக் கூடாதுன்னுட்டாங்க. சினிமாவும் முடங்கிப் போயிருக்கு. எதிர்காலத்தை நினைச்சா ரொம்பவே கலவரமா இருக்கு சார்’ என்கிறார்.
யார்கிட்டயும சொல்லாதீங்க!
ஆக்சிஜனுக்காக ஆலை திறக்கப்பட்டதில் அந்த எக்ஸ் தொகுப்பாளருக்கு ஹேப்பி என்கிறார்கள். ஆலை நிர்வாகம் மேற்படி தொகுப்பாளர் நடத்தி வரும் நிறுவனத்தின் முக்கியமான க்ளையன்ட் என்பது குறிப்பிடத்தக்கது.