
கல்யாணம் முடிந்தது என்றார்கள். ‘‘இல்லவே இல்லை, இப்போதைக்கு வீட்டில் சம்மதம் மட்டும் கிடைத்துள்ளது’’ என்றார் ‘யாரடி நீ மோகினி’ நட்சத்திரா


* லக்ஷ்மி ராமகிருஷ்ணன்- வனிதா இடையே கடந்த ஆண்டு லைவில் நடந்த சண்டை ஊரறியும். ஓராண்டு கடந்த நிலையில் அந்த நாளை நினைவுகூர்ந்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சில விஷயங்களைப் பேச, மறுபடியும் கொதி மனநிலையில் இருக்கிறாராம் வனிதா. ‘‘நான் அந்த விவகாரத்தையே மறந்துட்ட நிலையில திரும்பவும் அவங்க ஏன் கிளப்பணும்? இதுல இருந்தே யார் பப்ளிசிட்டியை விரும்பறாங்கன்னு தெரிஞ்சுக்கலாமே’’ எனச் சூடாகியுள்ளார் வனிதா.

* உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வேணு அரவிந்தின் உடல்நிலையில் தற்சமயம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ‘கோமா’வுக்குப் போய்விட்டார் எனப் பரவிய தகவல்தான் அவரது குடும்பத்தினரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கதை ஒன்றைத் தயார் செய்து வைத்திருக்கிறாராம். சினிமாவில் இயக்குநராக வேண்டுமென்பது அவரது நீண்ட நாள் ஆசையாம்.

* நடித்துக்கொண்டிருந்த சீரியலில் இருந்து ஒருவித வருத்தத்துடன் வெளியேறியதால், தற்சமயத்துக்கு அடுத்த சீரியல் குறித்து யோசிக்கப்போவதில்லை என முடிவெடுத்திருக்கிறாராம் ஷமிதா. ‘‘தொடர்ந்து சில ஆண்டுகளாக ஷூட்டிங்கிலேயே இருந்ததால் கணவன், மகள் எனக் குடும்பத்துடன் சரியாக நேரம் செலவழிக்க முடியாமல் இருந்தது; கொஞ்ச நாள் அவங்களுக்காக ஒதுக்கலாம்னு இருக்கேன்’’ என்கிறார்.

* விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியலின் ஹீரோ ஆனந்தின் சொந்த ஊர் கோயம்புத்தூர். சினிமாவுக்காகச் சென்னை கிளம்புவதாகச் சொன்னதும் வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. எனவே விஸ்காம் படிக்கப் போவதாகச் சொல்லிச் சென்னை வந்திருக்கிறார். விஸ்காம் படித்தபடியே சீரியல், வெப்சீரிஸ் எனப் பணிபுரிந்தவருக்கு இப்போது வீட்டில் எதிர்ப்பேதுமில்லையாம்.

* கல்யாணம் முடிந்தது என்றார்கள். ‘‘இல்லவே இல்லை, இப்போதைக்கு வீட்டில் சம்மதம் மட்டும் கிடைத்துள்ளது’’ என்றார் ‘யாரடி நீ மோகினி’ நட்சத்திரா. இப்போது சீரியல் முடிவடைந்துவிட்டதால் ஊரைக்கூட்டி நல்ல விஷயத்தைச் சொல்வாரா என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களாம் அவரின் ரசிகர்கள்.
யார்கிட்டயும் சொல்லாதீங்க!
கதாநாயகனை மாத்தினாலும் மாத்தினாங்க, நல்லாப் போயிட்டிருந்த சீரியல் நாலு இடம் இறங்கி, நாலாவதா இருந்த சீரியல் நம்பர் ஒன் இடத்துக்கு வந்திடுச்சு. இப்ப என்னடான்னா, அந்த ரெண்டு சீரியலையும் சேர்த்து விட்டிருக்காங்க. ‘இறங்கின சீரியல் மறுபடி டாப்புக்கு வரணும்னு இதைப் பண்ணா, அப்ப நாங்க எப்பவும் கீழேயேதான் இருக்கணுமா’ என முணுமுணுக்கிறார்கள், கஷ்டப்பட்டு முதலிடம் பிடித்த சீரியலில் நடிக்கும் சிலர்.