
சன் டி.வி-யில் புதிதாக ‘செவ்வந்தி’ என்னும் சீரியலை இயக்க கமிட் ஆகியிருக்கிறார் ரத்தினம்.


`சித்தி 2' ப்ரீத்தி சர்மாவின் சொந்த ஊர் உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ. 11-ம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோதே டெலிபிலிமில் நடிக்கத் தொடங்கிவிட்டார். சினிமா ஹீரோயினாக ஆசைப்பட்டவருக்கு, `கோலிவுட் அல்லது பாலிவுட் போனா மட்டுமே அந்த ஆசை நிறைவேறும்' என அட்வைஸ் செய்திருக்கிறது நட்பு வட்டாரம். தன்னுடைய சாய்ஸ் தமிழ்நாடு எனக் கிளம்பி வந்துவிட்டாராம்.


சிந்து - ஷியாம் கணேஷ் தம்பதி காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ஜோடி. இவர்களின் காதலுக்கு நடிகர் மம்மூட்டி ஒரு காரணம் என்றால் நம்புவீர்களா? நிஜம்தான். ஆரம்பத்தில் மம்மூட்டி நடித்த மலையாளப் படம் ஒன்றில் அவருக்கு மகளாக நடித்தார் சிந்து. ஷியாம் கணேஷ் `ஆனந்தம்' படத்தில் மம்மூட்டிக்குத் தம்பியாக நடித்தார். `ஆனந்தம்' ஷூட்டிங் ஸ்பாட்டில் சிந்துவைக் காதலிக்கத் தொடங்கியிருப்பது குறித்து மம்மூட்டியிடம் ஷியாம் சொல்ல, `ஓ, இந்தப் பொண்ணா, எனக்கு நல்லாத் தெரிஞ்ச, ரொம்ப நல்ல பொண்ணு' என்றாராம் மம்முக்கா. அது முதல் காதல் ரொம்பவே ஸ்ட்ராங் ஆனதாகச் சொல்கிறது இந்தச் சின்னத்திரை ஜோடி.

சன் டி.வி-யில் புதிதாக ‘செவ்வந்தி’ என்னும் சீரியலை இயக்க கமிட் ஆகியிருக்கிறார் ரத்தினம். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆண் பெண் வித்தியாசமில்லாமல் ஆர்ட்டிஸ்டுகளை உரிமையுடன் `கண்ணு' எனக் கூப்பிடுவது இயக்குநர் ஓ.என்.ரத்தினத்தின் வழக்கம்.

கணவருடைய விளம்பர நிறுவனத்தில் அவருக்கு நிர்வாக ரீதியாகச் சின்னச் சின்ன உதவிகளைச் செய்துவந்த சுஜிதா, விளம்பரப் படங்களை இயக்கத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் விளம்பரப் படம் ஒன்றிற்காக நடிகை ஹன்சிகாவை இயக்கிய அனுபவம் குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்.

புதிய சீரியலில் ஹீரோ எனக் கமிட் செய்து பைலட் ஷூட்டெல்லாம் முடிந்தும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் காத்திருக்க வைத்து விட்டார்களாம் அந்தப் பிரபல சேனலில். அதில் கடுப்பானதாலேயே `போதும் உங்க சீரியல்' என `பை பை' சொல்லி விட்டு `செல்லமா' சீரியலில் நடிக்க வந்துவிட்டாராம் நடிகர் அர்னவ்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...
தொடங்கப்பட்டு சில மாதங்களே ஆன அந்தச் செய்திச் சேனல் டி.ஆர்.பி-யில் சாதித்தும் அதைக் கொண்டாட முடியாமல் இருக்கிறதாம் சேனல் நிர்வாகம். காரணம் கடுமையான நிதி நெருக்கடி என்கிறார்கள். சேனலுக்கு உரிமம் பெறுவதில் ஏற்பட்ட தடைகள், தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பே நிறைய பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பெரிய அளவில் ஊதியம் வழங்கியது போன்றவைதான் நிதிச் சிக்கலை உண்டாக்கியதாகச் சொல்கிறார்கள். இந்தச் சிக்கலிலிருந்து எப்படி மீள்வது எனத் தீவிரமாக யோசித்துவருகிறார்களாம்.