
திருமணம் முடிந்த பிஸியில், தான் நடித்துக் கொண்டிருந்த ‘மகராசி’ தொடரை மறந்து விட்டாராம் மகாலட்சுமி

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்த ‘கில்லி’ ஜெனிஃபர், பிறகு டிவிக்கு வந்து சில சீரியல்களிலும் நடித்தார். இடையில் நடிப்புக்கு பிரேக் கொடுத்து விட்டு வீட்டிலிருந்தபடியே வேதிப் பொருட்கள் கலக்காத சோப்பு, முகப்பூச்சு முதலியவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் தற்போது திடீரென இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இவர் ஒரு உதவி இயக்குநர். இயக்குநர் கௌதம் மேனனின் அடுத்தடுத்த படங்களிலும் இவரை எதிர்பார்க்கலாமாம்.

‘ராஜா ராணி’ தொடரில் இருந்து அர்ச்சனா சமீபத்தில் வெளியேறினார் இல்லையா? அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. கதைப்படி சீரியலில் அவருடைய கேரக்டர் தாய்மை அடைய வேண்டுமாம்.’கர்ப்பிணிப் பெண்ணாக இந்தச் சின்ன வயதில் நடிக்க வேண்டாமே’ என்றெண்ணியே தொடரில் இருந்து விலகிக் கொள்வதாகச் சொல்லி விட்டு வெளியேறினாராம்.

சினிமா, சீரியல் வாய்ப்புகள் இல்லாமல் பொருளாதார ரீதியில் சிரமப்படுவதாகச் சொல்லியிருந்த ஐஸ்வர்யாவுக்கு புது சீரியல் வாய்ப்பை வழங்கியுள்ளது கலர்ஸ் தமிழ் சேனல். விரைவில் அதில் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஜமீலா’ தொடரில் முக்கியக் கேரக்டரில் நடிக்கிறார் ஐஸ்வர்யா.

‘மாஸ்டர் செஃப் தமிழ்’ இரண்டாவது சீசன் தொடங்கப்பட இருப்பதாகப் பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் இந்த முறை விஜய் சேதுபதிக்குப் பதில் வேறு ஒருவர் தொகுத்து வழங்கலாம் எனச் சொல்லப் படுகிறது.

திருமணம் முடிந்த பிஸியில், தான் நடித்துக் கொண்டிருந்த ‘மகராசி’ தொடரை மறந்து விட்டாராம் மகாலட்சுமி. திருமணம் ஆனதிலிருந்தே ஷூட்டிங் செல்லாததால் அவரது கேரக்டருக்கு தற்போதைக்கு பிரேக் கொடுக்கலாம் என முடிவு செய்திருக்கிறதாம் யூனிட்.
யார்கிட்டயும் சொல்லாதீங்க...
ரசிகர்களிடம் பணம் திரட்டி படம் எடுத்த ஹீரோவை நினைவிருக்கிறதா? அந்த ஹீரோவை மறுபடியும் ஒரு சீரியலில் நடிக்க வைத்து விட்டால், விட்ட ரேட்டிங்கைப் பிடித்து விடலாம் என நினைத்த சேனல் அதற்காக அவரை அணுகியதாம். நடிகரும் இதற்காகவே காத்திருந்தது போல ‘‘நிச்சயம் நான் பண்றேன், அதுக்கு நீங்களும் எனக்கு ஒரு உதவி செய்யணும். நான் எடுத்து வைத்திருக்கிற படத்தை உங்களுடைய ஓ.டி.டி-க்கு வாங்கிக் கொள்ளணும்’’ என்றாராம். இப்படியொரு டீலிங்கை நடிகரிடமிருந்து எதிர்பார்க்கவில்லையாம் சேனல்.