
சீரியல்
`இவருக்குப் பதில் இவர்’ என ஸ்லைடு போடுவதெல்லாம் சீரியல்களின் பழைய ஸ்டைல். `அட, ஆளே மாறிட்டீங்க...’ என்கிற ஒரு ஆச்சர்ய டயலாக்கில் ஆர்ட்டிஸ்டுகள் மாறி விடுவதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்! ஆர்ட்டிஸ்டுகளை மட்டுமல்ல ஷூட்டிங்கின் அட்மாஸ்பியரையுமே தாறுமாறாக மாற்றிப் போட்டுள்ளது கொரோனா. லாக்டௌனுக்குப் பிந்தைய ஷூட்டிங் எப்படி இருக்கிறது என்று பார்க்க சீரியல் ஏரியாவில் ஒரு ரவுண்டு வந்தபோது பார்த்தவை, கேட்டவை இங்கே...

``வேடிக்கையாச் சொல்லணும்னு சொல்லலை. முதல் ரெண்டு நாள் இப்படியான ஷூட்டிங் அட்மாஸ்பியரைப் பார்த்ததும் எனக்கு வண்டலூர் மாதிரியான ஒரு மிருகக்காட்சி சாலைதான் கண்முன்னாடி வந்தது. எங்கேயோ சுதந்திரமாத் திரிஞ்சிட்டிருந்த விலங்குகளைக் கூண்டுக்குள்ள அடைச்சு வைக்கிற மாதிரில்ல நம்ம நிலைமையும் வந்திடுச்சே’ன்னு நினைச்சேன்’’ என்றபடியே பேச ஆரம்பித்தார் ‘நாயகி’ சீரியல் இயக்குநர் குமரன்.

``ஒரு டைரக்டரா ஆர்ட்டிஸ்டுகள் கிட்ட காட்சியை விவரிச்சுச் சொல்றப்ப என்னுடைய முக ரியாக்ஷன் ரொம்ப முக்கியம். ஆனா இப்ப மாஸ்க்கைப் போட்டுக்கிட்டு தள்ளி நிற்கிறப்ப நம்ம கண்ணை மட்டும்தான் அவங்களால பார்க்க முடியுது. அதேபோல டைரக்ஷன் பண்ணுறதைவிட அதிகமா மெனக்கெடுகிற ஒரு வேலைன்னா, ஸ்பாட்ல எல்லாரும் கட்டுப்பாடுகளை சரியா கடைப்பிடிக் கிறாங்களான்னு பார்க்கிறதுதான். சொல்லப்போனா டைரக்டருக்கு டபுள் வேலை. ஆனா எல்லோருடைய ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்துறது ரொம்ப முக்கியம் இல்லையா? ஒருபக்கம் நிதானமும் பொறுமையும் ரொம்பவே அவசியமா இருக்கு. அதேநேரம் வேலையும் நடந்தாகணும். கொரோனா காலச் சவால்னு எடுத்துட்டுப் போயிட்டே இருக்கோம்’’ என்கிறார் மாஸ்க் மறைக்கும் புன்னகையுடன்.

‘`ஒரு இறுக்கத்துடன், ரொம்பவே பயந்துட்டே இருந்தாலும் சரியா இருக்காதில்லையா? அதான் கொரோனாவைக் கடந்து ஒர்க் பண்ண ட்யூன் ஆகிட்டோம். முதல்ல சில நாள்கள் குழப்பம் இருந்தது. உதாரணத்துக்கு, கிளிசரின் போடணும்னா கண்ணுல கையை வைக்கலாமா கூடாதானெல்லாம் தெரியல. இப்ப அந்த மாதிரியான குழப்பங்களெல்லாம் இல்லை. அப்புறம், ஸ்பாட்ல எங்காச்சும் லேசா கூட்டம் சேர்ந்தாலே, ‘கொரானா கொரோனா’ன்னு ஒருத்தரை ஒருத்தர் ஜாலியா கலாய்ச்சிட்டு நகர்ந்திடுறாங்க. சுய எச்சரிக்கை எல்லாருக்குமே வந்திடுதுங்கிறது எங்களுக்கு பெரிய நிம்மதியா இருக்கு’’ என்கிறார் குமரன்.

நிறைய சீரியல்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த சீனியர் ஆர்ட் டிஸ்டுகள் குறிப்பாக நடிகைகள் சிலர் லாக்டௌனுக்குப் பிந்தைய ஷூட்டிங்கில் இல்லை. இவர்கள் தங்கள் விருப்பப்படியே ஒதுங்கிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ‘நாயகி’யில் நடிக்கும் அம்பிகா, `எப்ப ஷூட்டிங்’ என்றபடி ஷூட்டிங்கிற்குத் தயாராகவே இருந்திருக்கிறார். ‘அவங்க வயசுல இருந்த நிறைய பேர் `ரிஸ்க் எடுக்கணுமா’ன்னு யோசிச்சப்ப, இவங்க துணிஞ்சு ஷூட்டிங் வந்துட்டதோட, இப்ப ஸ்பாட்லயும் முன்ன மாதிரியே எல்லாரிடமும் சகஜமாகப் பேசிப் பழகிட்டுதான் இருக்காங்க’ எனச் சிலாகிக்கிறது ‘நாயகி’ யூனிட்.

முதல்நாள் ராத்திரி வரை ஒண்ணாத்தான் நடிச்சிட்டு வீட்டுக்குப் போயிருப்போம். ஆனாலும் மறுநாள் காலையில ஷூட்டிங் ஸ்பாட் வந்ததும், ‘ஹாய்... ஹவ்வ்வ்வ் ஆர் யூ’ன்னு ஒருத்தருக்கொருத்தர் ஹக் பண்ணுற இந்தக் `கட்டிப்புடி வரவேற்பு’ இப்ப எங்க போச்சுன்னே தெரியல. `கையவே குலுக்காத’ங்கிறப்ப எங்கிட்டுக்கூடி கட்டிப்பிடிக்கறது?’ என்கிறார் ‘ஊர்வம்பு’ லக்ஷ்மி.

“ `சிவாஜி’ படத்தில ’பல்லேலக்கா’ பாட்டுக்குப் பிறகுதான் சினிமா உலகத்துக்கே என்னைத் தெரியும். அப்ப எனக்கு வயசு 60 கடந்திடுச்சு. நான் மட்டுமில்லை, என்னை மாதிரி நிறைய பேர் காலம் போன கடைசியில வந்திருக்காங்களே, ஏன், சமீபத்துல இறந்த பரவை முனியம்மா, அறுபதுக்கு மேலதான் சினிமாக்குள்ள வந்திருப்பாங்க. என்னவோய்யா, கொரோனா புண்ணியத்துல நடிக்கப் போக முடியாம மதுரையில வீட்டுல இருக்கேன். ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல்தான் டிவியில என்னை பேமஸாக்குச்சு. இப்ப பொசுக்குனு முடிச்சுட்டு ரெண்டாவது சீசன் தொடங்கிட்டாங்க. அதுல நடிக்க முடியாதது வருத்தமாத்தான் இருக்கு. கொரானா முடிஞ்சா உடனே கூப்டுருவாங்களாய்யா?’ என்கிறார் சீனியம்மாள்.

மதியச் சாப்பாடு பெரிய பெரிய கேரியர்களில் வரும். சாம்பார், ரசம், மோர், பொரியல், கீரை, ஊறுகாய் என சைவம், அசைவம் எல்லாமும் இருக்கும். சில சீரியல்களில் ஹீரோ ஹீரோயின்களே இந்த ஷூட்டிங் சாப்பாட்டை சாப்பிட்டதுண்டு. தட்டுகள் அங்கேயே கிடைக்கும். இந்த நடைமுறை தற்போது இல்லை. பேக் செய்யப்பட்ட கண்டெய்னரில் உணவு வருகிறது. ஆனாலும் சில ஆர்ட்டிஸ்டுகள் தட்டுகளை மட்டுமல்ல சாப்பாட்டையுமே வீட்டிலிருந்து கொண்டு வந்து விடுகிறார்கள்.
தயாரிப்புச் செலவு கொஞ்சம் குறைந்திருப்பதாக ஒருசிலர் சொல்கிறார்கள். ‘மேக்கப்’, ‘டச்சப்’ முதலான விஷயங்களை ஆர்ட்டிஸ்டுகள் தாங்களே பார்த்துக் கொள்வதன் மூலம் இந்த நன்மையாம். அதேநேரம், “மாஸ்க், டெம்பரேச்சர் செக்கப், இன்ஷூரன்ஸ் போன்ற செலவுகளையும் தயாரிப்புத் தரப்பே செய்வதால், செலவுக் குறைவு என்பதெல்லாம் இல்லை” என்கிறார், `சத்யா’, ‘ராசா மகன்’ தொடர்களின் தயாரிப்பாளர் மனோகரன்.

ஸ்கிரிப்ட் சைடில் நேரம் ரொம்பவே மிச்சமாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆன்லைன் மீட்டிங்கில் பேசுவதால் வேலை விரைவாக நடக்கிறதாம்.