ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'RRR' படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றிருந்தது. சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதையும் பெற்றது. இதனிடையே ஆஸ்கர் விருதுக்கும், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இந்தப் பாடல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் மார்ச் 12-ம் தேதி ஆஸ்கர் விருது விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் நடக்கவுள்ள இந்த விருது விழாவில் கலந்துகொள்ளச் செல்வதற்காக ஐதராபாத் விமானநிலையத்துக்கு வந்திருந்தார் ராம் சரண். அப்போது அவர் காலில் செருப்பு, ஷூ என எதுவுமே அணியாமல் வந்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

உடனே அதற்கான காரணம் என்ன எனவும் பலர் கமென்ட் அடித்துவந்தனர். ராம் சரண், ஐயப்பனுக்கு விரதம் இருப்பதால்தான் செருப்பு அணியாமல் விமானநிலையத்துக்கு வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. தீவிர ஐயப்ப பக்தரான அவர், விரதத்தை விடாமல் கடைப்பிடிப்பார் என்றும் தெரிவிக்கின்றனர். சர்வதேச விமானப் பயணத்துக்கு ராம் சரண் இவ்வாறு வந்ததை அறிந்த பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.