
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
Savitha
உறவின் தொடக்கத்தில் விட்டுக் கொடுத்தல் என்பது ஆகப்பெரும் போதை.
பிரிவின் தொடக்கத்திலோ... தான் இறங்கிப் போன முட்டாள்தனம்தான் விடாமல் குத்தும் நெருஞ்சி முள்.
Ramanujam Govindan
நீங்கள் செத்துப்போயிருந்தால் உங்களைச் சுற்றி இருப்போருக்குத்தான் அந்தத் துன்பம் எல்லாம். உங்களால் அந்தத் துன்பத்தை உணர முடியாது. நீங்கள் முட்டாளாக இருந் தாலும் அது போலத்தான்.
Gokul Prasad
இன்புற்று வாழ்கிறவர்களால் இந்த உலகத் துக்கு எந்தப் பயனும் இல்லை. சொகுசு மனிதனை மந்தமாக்கிவிடும்.
அல்லலுற்று, அலைக்கழிந்து, துயரம் பீடித்து உழன்றவர்களே மானுட குலத்திற்குக் கொடையாக எதையேனும் விட்டுச்சென்றிருக் கிறார்கள். உலகின் மேன்மைக்குப் பங்களித் திருக்கிறார்கள். நாம் இன்று வந்தடைந்திருக்கும் பண்பட்ட நிலைக்குப் பின்னால் கடும் வாதையில் துடிதுடித்து மாண்டவர்களின் கண்ணீர் வரலாறு இருக்கிறது. இங்கிருந்து உலகம் மேலும் முன்னகர்ந்து பக்குவப் படுவதற்குத் தன்னை எரித்துச் சுடரும் மனங் களின் ஓலம் அவசியம்.
எரிமலைக் குழம்பைப் பூமியின் ரத்த வோட்டம் என்பார்கள். அதுபோல, வாழ்க்கைப் பாடுகளே சிந்தனையின் ஊற்று.

இந்திரா ராஜமாணிக்கம்
வேலைநிமித்தம் இரண்டு நாட்கள் திருச்சி செல்லவிருப்பதையும் ஹோட்டலில் ரூம் கிடைக்காததால் பழைய ரூம்மெட்டிடம் ஹாஸ்டல் அறையை கேட்டிருப்பதையும் க்ரஷிடம் கூறினேன்.
``அதெப்டி ஹோட்டல்ல ரூம் கிடைக்காம போகும்? இருங்க நான் விசாரிச்சு சொல் றேன்” என்றபடி வீராவேசமாக போனை கட் செய்தான்.
பரவாயில்ல, நமக்கு வாய்த்த க்ரஷ் ஹெல்ப்பெல்லாம் பண்றான். ஹாஸ்டல்னா கசகசனு இருக்கும். இவனே நல்லதா அரேஞ்ச் பண்ணட்டும். க்ரஷ் வாழ்க!
ரூம்மெட் போன் செய்தாள், ``வார்டன் கிட்ட பேசிட்டேன். வரும்போது போட்டோ, ஐடி ப்ரூஃப் கொண்டு வரச்சொல்றார். முன்னாடியே பணம் கட்டிடணுமாம். ஏற் கனவே தங்கிருந்தவ தானேனு கேட்டா, யாராயிருந்தாலும் ரூல்ஸ்தான்னு வாய் பேசுறார்.”
மைண்ட் வாய்ஸ் எகத்தாளமாய் சிரித்தது. ``இங்க ஒருத்தர்கிட்ட சொல்லிருக்கேன், எதுக்கும் வெய்ட் பண்ணிப் பார்ப்போம்.”
லன்ச்சில் க்ரஷக்கு திரும்ப போன் செய்தேன். ``வேலையா இருக்கேன், ஒரு அரைமணி நேரத்துல கன்ஃபார்ம் பண்ணி சொல்லிடுறேன். அநேகமா கிடைக்க வாய்ப் பிருக்கு” என்று அழைப்பை துண்டித்தான். ரூம்மெட்டிற்கு மெசேஜ் செய்தேன், ``ரூம் கிடைச்சிடும்னு நினைக்கிறேன். நீ வார்டன் கிட்ட எதுவும் கேக்க வேண்டாம்.”
``R U Sure?”
ரூம்மெட் கறாராகக் கேட்டதும், எதற்கும் க்ரஷிடம் கன்ஃபார்ம் செய்துகொள்ளலாமென அரைமணி நேரங்கழித்து நானே அழைத் தேன். கட் செய்துவிட்டு மெசேஜ் அனுப்பி னான். “பேசிட்டேன். கன்ஃபார்ம்டு, Five minutes.”
ரூம்மெட்டிடம் மிடுக்காகச் சொன்னேன், ``அந்த சிடு மூஞ்சி வார்டன்கிட்ட சொல்லிடு, ரூம் ஒண்ணும் தேவை யில்லனு. நானே அரேஞ்ச் பண்ணிக்கிட்டேன்.”
“சரி போ.”
அப்பாடா... ஒருவழியா தங்குறதுக்கு இடம் கிடைச்சது. `புக் பண்ணியாச்சு, நானே Pay பண்ணிட்டேன்’னும் சொன்னா செமையா இருக்கும். க்ரஷ் நீடூழி வாழ்க!
சரியாக இருபது நிமிடம் கழித்து அழைத்தான்.
``ரூம் இருக்குதாம், சீசன் டைம் இல்லேல, அதுனால கஷ்டமில்ல.”
``ஓ.. அப்ப சரி. ரொம்ப தேங்க்ஸ்ங்க.”
``அட பரவாயில்லங்க. இதெல்லாம் சொல்லணுமா?”
``ஹிஹி... ஹோட்டல் பேருங்க? பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல தானே?”
``அதெல்லாம் நான் பாக்கலயே”
``பின்ன? ரூம் இருக்குன்னீங்களே..”
``அது என் ஃப்ரெண்ட் கிட்ட கேட்டேன், திருச்சில ரூம் கிடைக்குமானு. சீசன் டைம் இல்லேல, மோஸ்ட்லி ஃபுல்லாக வாய்ப்பில்ல... So ஈஸியா கிடைக்கும்னான். அதுனால தேடிப்பாருங்க, கண்டிப்பா கிடைக்கும்.”
``உங்க ஃப்ரெண்ட் எந்த ஊரு?”
``அவன் கன்னியாகுமரிங்க.”
ரூம்மெட்டின் நம்பரை திரும்ப டயல் செய்த மீ:

Geetha Narayanan
இந்த குடும்பத்தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் விவாதங்களை வாசித்த பின் இதை எழுதுகிறேன்.
பெண்ணியப் பார்வையில் பெண் உழைப்பை மூன்றாகப் பிரிப்போம். 1. உற்பத்தி வேலை (பொருள் ஈட்டும் வேலை)... 2. மறு உற்பத்தி வேலை (வீட்டில் இருக்கும் அனைவரும் பொருள் ஈட்டத் தேவையான அனைத்து வேலைகள், சமையல், வீட்டை சுத்தம் செய்தல், துவைத்தல், குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, நோயுற்றோர் பராமரிப்பு, வீட்டிற்கான திட்டமிடல், பொருள் வாங்குதல், பண்டிகை வேலைகள் இன்ன பிற. இது தவிர கணவன் தொழிலில், நிலத்தில் உழைத்தல். அப்படிச் செய்யும் போது தொழிலாளர், விவசாயி என்ற அங்கீகாரம் இல்லாத போதும் உழைத்தல், நிவாரண உதவி, சங்கம் அமைக்கும் உரிமை இல்லாத நிலையிலும் தொடர்தல்... 3. சமூக வேலை (ஊர் சார்ந்த, தெரு சார்ந்த, சுய உதவிக் குழு சார்ந்த, அடுக்கக நிர்வாகம் சார்ந்த, மத அமைப்புகள் சார்ந்த, பஞ்சாயத்து அமைப்பு சார்ந்த இன்ன பிற வேலைகள்)...
ஊதியமில்லாத பெண் உழைப்பு (Unpaid and invisible care work of women) மதிக்கப்பட வேண்டும். அது அரசால் மதிக்கப்பட வேண்டும். குடும்ப வள ஆதாரங்களில் பெண்ணுக்கு உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை பெண்கள் இயக்கங்கள் முன்வைத்தன. அதன் ஒரு படி இந்த ஆயிரம் ரூபாய். எட்டு கோடி மக்கள் தொகையை நெருங்கும் தமிழகத்தில் அனைவருக்கும் கொடுக்க முடியாது. ஆகவே எளியோரிடம் தொடங்குகிறார்கள். ஆனால், குடும்பங்கள் பெண் உழைப்பை மதிப்பது, வீட்டு வேலையை அனைவரும் பகிர்வது இந்த அரசியலின் இன்னொரு இலக்கு.
தனித்து வாழும் பெண்கள் அதிகரிக்கும் நிலை, பெண் வருமானத்தை நம்பி இருக்கும் குடும்பங்கள் அதிகரிக்கும் நிலை ஆகியற்றைக் கருத்தில் கொண்டும் இந்தத் திட்டத்தைப் பார்க்க வேண்டும்.This is addressing the politics of unpaid care work of women.
Primya Crosswin
புடவை விற்கும் தனிப்பெண் ஒருத்தி
தன் பொதி கனத்த பைகளுடன்
பொம்மையும் கையுமாய்
பெண் பிள்ளை ஒன்றையும்
அன்று அழைத்து வந்திருந்தாள்...
முறிந்த கிளையின் கூடொன்றினை சுற்றிப்
பதைபதைக்கும்
பறவையின் கண்கள் அவளுக்கு!

SJB
செல்போன் கையில் எடுத்தால் உலகில் என் னென்ன நடக்குது என்பது தெரியும். செல்போனை கீழே வைத்தால் வீட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியும்.
Selva Bharathi
அடுத்தவர் என்ன நினைப்பார் என்பதுதான் பல முயற்சிகளுக்கும் தடை. அடுத்தவர் எப்போதும் நம்மைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதில்லை.
நர்சிம்
ஒரு யானை
நீரைவாரி இறைக்கும்
குதூகலத்தோடு
ஆரஞ்சு விதைகளை
ஊதித் துப்பும்
சிறுவனைப் போல்
நிலா பார்க்கும்போது
வயிற்றை வருடும்
கர்ப்பிணியின்
அனிச்சைக் கைகளைப்போல்
ஏதெனும் ஒருபொழுதில்
இப்படி
சாளரத்தில் சாய்ந்துபாயும்
வெயிலென வந்துவிடுகிறது
ஊர் நினைப்பு.